சென்னை: அரசுப் பணியில் இருந்து வில்லியனூர் எம்.எல்.ஏ விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுச்சேரி மாநில பஞ்சாயத்து துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வந்த ரவிகுமாருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் அரசு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ரவிக்குமார் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்யாததால், வில்லியனூர் தொகுதி வாக்காளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வில் வீசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரை தனி நீதிபதியின் உத்தரவை காரணம் காட்டி உடனடியாக பணியிலிருந்து விடுவித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதது ஏன் என்று கண்டனத்தை நீதிபதிகள் தெரிவித்தனர்.
ரவிக்குமாருக்கு அளித்த சலுகையை அனைத்து அரசு ஊழியருக்கும் அளிக்க தயாரா என்கிற கேள்வியையும் புதுச்சேரி மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த குற்றத்தை எப்படி நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துகொள்ளும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இந்த மேல்முறையீடு வழக்கிற்கு 2 வார கால அவகாசம் தர வேண்டும் என்று புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 2 வார காலஅவகாசம் விடுக்கப்பட்டுள்ளது.

