கனவை நிஜமாக்கும் நெடுங்குடி கைலாசநாதர்!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது, நெடுங்குடி என்ற இந்த சிறிய கிராமம். இவ்வூர் சமையல் உலகம் முழுவதும் பிரலபலமாகி வருகிறது. புராண காலத்தில் வில்வமரங்கள் மண்மலை குன்றுகள் அதிகமாக இங்கே இருந்துள்ளன. இதனை ஒரு நாள் தொலைவில் இருந்து அசுர சகோதர்களான பெருஞ்சீவி, சிரஞ்சீவி ஆகிய இரண்டு பேரும், பார்த்துள்ளனர். நாம் பல இடங்கள் சுற்றித் திரிந்தும், இது போல ஒரு இடம் அமையவில்லை என்ற ஏக்கத்துடன் இங்கே வந்துள்ளனர்.

வந்த இரண்டு பேரும், பல்வேறு கோயில்களில் பூஜித்து வந்தவர்கள். அதனால், இங்கேயும் பூஜிக்க வேண்டும் என எண்ணினர். இதனால், அண்ணன் பெருஞ்சீவி, தன் தம்பி சிரஞ்சீவியிடம், வழிபாட்டிற்காக காசியிலிருந்து ஒர் புனிதலிங்கம் எடுத்து வரச்சொல்லி தம்பியிடம் கூறுகிறார். அண்ணன் சொன்ன வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்காமல், தம்பி காசிக்கு செல்லுகிறார். ஆனால், சென்றவர் முக்கிய பூஜைக்கு சரியான நேரத்தில் வர முடியாததால், தானே ஒரு சிவலிங்கத்தை மண்ணால் செய்து சிவவழிபாடு செய்கிறார், பெருஞ்சீவி. மிகவும் சிரமப்பட்டு காசிக்குச் சென்ற தம்பி சிரஞ்சீவி, அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது, இங்கு ஒரு சிவலிங்கம் பூஜையில் இருப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

அண்ணன் என்னை காசிக்கு அனுப்பிவிட்டு, இந்த வேலையை செய்துவிட்டாரே என மனம் வருந்தினார். அடுத்த நொடி உடனே அண்ணனிடம், தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றார். அண்ணனுக்கோ, கோபம் உண்டாகிறது. “தம்பி.. நீ ஏற்கனவே தாமதமாகி வந்தாய். அது மட்டுமல்லாமல், இப்போது அடம்பிடிக்கிறாய்’’ என்று சொல்ல, நீண்ட வாக்குவாதம் ஆனது. “என்னதான் சண்டைப்போட்டாலும்; நீ காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தை நான் வைக்கமாட்டேன்’’ என்றார். அப்போது தம்பி சிரஞ்சீவி கோபம் கொண்டு; “நீ மண்ணால் செய்த இந்த லிங்கத்தையும், இந்த மலையையும் உடனே நான் அழிக்கிறேன்’’ என, அண்ணனிடம் சபதம் விட்டான்.

அதன் பின், கைலாயநாதனை நோக்கி தியானித்து கடும் தவத்தில் மூழ்கினான். இதனைப் பார்த்த அண்ணன், சிறிது நேரம் கண் கலங்கி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான். தம்பியின் தவத்திற்கு வெற்றி கிடைத்தால், என்னுடைய மண்ணால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு பாதிப்பு எதுவும் நிகழ்ந்துவிடக்கூடும் என்பதற்காக, தானும் கைலாயநாதனை தியானித்து, தவத்தில் ஆழ்ந்தான். இந்த சகோதரர்களுக்கு, அருள்புரிய சித்தம் கொண்டார், திருமால். சின்ன சிரஞ்சீவிக்காக ஆதிசேஷனையும், பெரிய சிரஞ்சீவிக்காக கருடனையும் அனுப்பிவைத்தார்.

ஆதிசேஷன் மண்லிங்கம் அமைத்த மலையை அசைக்க ஆரம்பித்தது. கருடனோ.. அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும் பாம்பு அங்கிருந்து ஓடிவிட்டது, கருடனும் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்கள் முன் தோன்றிய திருமால், “உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது இதைப் புரிந்துகொண்டு சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வழிபடுங்கள்.

நீங்கள் சிவபூஜை செய்த இத்தலம் புகழ்ப்பெற்று திகழும்’’ என்று அருள்புரிந்து, பெருஞ்சீவி பூஜை செய்த லிங்கம் கைலாசநாதர் எனவும், சிரஞ்சீவி காசியில் இருந்து கொண்டுவந்த சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து வணங்கும்படி ஆணையிட்டு, மறைந்தார். சிரஞ்சீவி கொண்டு வந்த லிங்கம் பின்புறத்தில் வைக்கப்பட்டது. பிறகு, சில காலங்கள் ஓடியது. சிவலிங்கம் திடீரென மண்ணுக்குள் மறைந்தது.

பல நூற்றுக்கணக்கான வருடங்கள் கழித்து, இப்பகுதியைச் சேர்ந்த சிலர் அப்போது சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்க திருமேனியைத் தரிசித்தனர். அந்த லிங்கத்துக்கு ஒரு படி பால் ஊற்றி, அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர். மறுநாள், அந்தப் பாலுக்கு உரிய விலையாக சிவலிங்கம் அருகில் பொற்காசுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுபோன்று அடுத்த, அடுத்த நாட்களிலும் இந்த அற்புதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து, அந்த லிங்கத் திருமேனிக்கு படிகாசுநாதர் என்னும் திருப்பெயர் சூட்டப்பட்டது. பிறகு பாண்டிய மன்னவர்களில் ஒருவரான ஜடாய்வர்ம வல்லவ சுந்தரபாண்டியன் இத்தலத்தை எழுப்பிக்கட்டினான். காலம் மாற்றத்தில், பிரசன்னநாயகி அம்மன் சந்நதியும் எழுப்பப்பட்டு, 13-ஆம் நூற்றாண்டில் ஒரு முழுமைப் பெற்ற திருக்கோயிலாக உருவானது.

இங்கு வழிபட்டால், காசியிலும், கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில், இருக்கும் இக்கோயில் 1984-ஆம் ஆண்டு பக்தர்களின் பெரும் முயற்சியால் திருப்பணி நடைபெற்று விரிவுப்படுத்தப்பட்டு புது பொழிவுப் பெற்று விளங்குகிறது.

நன்மைகள் ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாதசங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில், மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள் மற்றும் ஜாதகத்தில் பித்ருதோஷம், புத்திரதோஷம், மாங்கல்யதோஷம், சர்ப்ப தோஷம், உள்ளவர்கள் இது போன்று வேற சில தோஷம் உள்ள ஆண்கள், பெண்கள், அனைவரும் அம்மனுக்கும், நாதருக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஜங்கோணக்கோலமிட்டு நெய்தீபம் ஏற்றி ஒரு மனதுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வந்தால், சகல தோஷங்களும் நீங்கி சுபமங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை.பௌர்ணமி நாட்களில் திருவண்ணா மலையில் கிரிவலம் செல்வதுபோல, இக்கோயிலும் கிரிவலம் நடக்கிறது.

அப்போது பக்தர்கள், கோயில் அடிவாரத்தில் உள்ள ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி, சுவாமியை தரிசித்தால் நல்லது. பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர் இங்கு வந்து ஒரு நாள் தங்கி சர்ப்பநதியில் நீராடி, தேரோடும் வீதிகளில் ஐந்து முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும், கைலாசநாதருக்கும் அர்ச்சனை செய்தால், மகப்பேறு உண்டாகும். கைலாசநாதரை கனவில் கண்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் வாய்வழிச் செய்தியாகும்.

மனநிலைப் பாதிக்கப்பட்டவர்கள், சந்நதி முன்பு உச்சியில் அமைக்கப்பட்ட மண்டபத்தில், கீழ் தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து, “ஓம் நமசிவாய’’ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். அப்படி நடந்தால், நினைத்தது நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர் நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிறப்பித்து வருகின்றனர். புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி ஆகிய ஊர்களில் இருந்து மஹாசிவராத்திரியன்று சிறப்பு பேருந்துகள் நேரடியாக இயக்கப்படவுள்ளது.

நடைதிறந்திருக்கும் நேரம்: காலை 6:30 – 12.00, மாலை 4:30 – 8.30.

எப்படி செல்வது: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 31 கி.மீ., பயணித்தால் இக்கோயிலை அடையலாம்.

புதுகை பொ.ஜெயச்சந்திரன்

 

Related Stories: