தாம்பரம் போக்குவரத்து கழக பணிமனை அருகே ஜிஎஸ்டி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் அரசு பேருந்துகள்: நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்

 

தாம்பரம்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடப்பேரி பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனை வளாகத்தில் மாநகர பேருந்துகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தினமும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் பயணிகளை ஏற்றிச் செல்ல எடுத்துச் செல்வது வழக்கம். குறிப்பாக அதிகாலையில் பணிமனையில் இருந்து கொண்டு செல்லப்படும் பேருந்துகள் பணி முடிந்து இரவு நேரங்களில் மீண்டும் பணிமனைக்கு கொண்டு வரப்படும். அதேபோல், மதிய நேரங்களிலும் ஏராளமான பேருந்துகள் பணிமனைக்கு வருவது வழக்கம். இவ்வாறு பணிமனைக்கு வரும் அரசு பேருந்துகள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. குறிப்பாக, சாலையில் 3 முதல் 4 வரிசைகளாக பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நிறுத்தி விட்டு செல்வது, பணிமனைக்கு உள்ளே பேருந்துகள் திரும்பவும் இடத்தில் வரிசையாக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு செல்வதால் வெளியே இருந்து உள்ளே பேருந்துகள் செல்ல முடியாமலும், உள்ளே இருந்து வெளியே பேருந்துகள் வர முடியாமலும் இருக்கும் நிலை தினமும் ஏற்பட்டு வருகிறது.

இதனால் பணிமனையின் உள்ளே இருக்கும் பேருந்துகள் வெளியே வரும் வரை பணிமனையின் உள்ளே செல்ல வேண்டிய பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பணிமனை வெளியே உள்ள சிக்னல் அருகே சாலையை ஆக்கிரமித்து மூன்று வரிசைகளில் நிற்கின்றது இதனால் அவ்வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அரசு பேருந்துகளின் பின்னால் வரிசையாக நின்று செல்ல முடியாது நிலை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் தினமும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மதிய நேரங்களில் தினமும் இதே நிலைதான் அப்பகுதியில் இருந்து வருகிறது. இதே போல தாம்பரம் பேருந்து நிறுத்தம் மற்றும் கடப்பேரி பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் இரவு நேரங்களிலும் 3 முதல் 4 வரிசைகளில் அரசு பேருந்துகளை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அப்படியே விட்டு செல்கின்றனர். இதனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை இருந்து வருகிறது.

பின்னால் வாகனங்களுக்கு வழிவிடாமல் பணிமனையின் உள்ளே செல்வதற்காக நீண்ட நேரம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்படும் அரசு பேருந்தில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்தினரிடம் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பும்போது அப்படித்தான் நிறுத்துவோம். வண்டியை பின்னால் எடுத்து வலதுபுறம் திரும்பி செல் என அலட்சியமாக பதில் அளிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். அங்கே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இருக்கும் போக்குவரத்து போலீசார் சார்பில் பலமுறை எச்சரித்தும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அவர்கள் சொல்வதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே இருந்து வருவதாக போலீசாரும் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வரும் நாட்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகாமல் இருக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கி, பணிமனைக்கு உள்ளே பேருந்துகள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வந்து, செல்லவும், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பேருந்துகளை சாலையோரம் ஒரே வரிசையாக நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: