×

ஐ.ஜி. மீது பண மோசடி கொலை மிரட்டல் புகார்: குற்றப்பிரிவினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: காவல்துறை பயிற்சி பள்ளி ஐஜி மீது பண மோசடி, கொலை மிரட்டல் புகாரை குற்றப்பிரிவினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கோச்சடையை சேர்ந்த குணசேகரன், மதுரை ஜேஎம் 1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
காவல்துறை பயிற்சிப்பள்ளி ஐஜி ஜெயகவுரிக்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் கட்டிடம் மதுரை காளவாசல் பகுதியில் உள்ளது. இதை நான் கடந்த 17 ஆண்டுகளாக பராமரித்து வந்துள்ளேன். கடந்த 2025ம் ஆண்டு, அந்த கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யப் பொறியாளர் ஒருவரை ஐஜியின் உத்தரவின்பேரில் அறிமுகம் செய்து வைத்தேன். அங்கு அமையவிருந்த வணிக வளாகக் கடைகளில் வாடகைக்கு வர விரும்பியவர்களிடம் முன்பணம் பெற்று, அதை பொறியாளரிடம் கொடுக்குமாறு ஐஜி கூறினார். அதன்படி, பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.95 லட்சம் முன்பணமாக பெற்று அனுப்பினேன். அந்த கடைகளின் சாவிகளைப் பறித்துக் கொண்ட ஐஜி மற்றும் சில காவல்துறை அதிகாரிகள், அந்த இடத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ‘பணத்தைத் தர முடியாது’ என ஐஜி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், சீருடை அணியாத இரு காவலர்கள் என்னுடைய வீட்டிற்குள் புகுந்து, என்னையும், எனது மனைவியையும் கடந்த மார்ச் மாதம் மதுரை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சட்டவிரோதக் காவலில் வைத்தனர். இந்த அத்துமீறல்கள் குறித்து தமிழக டிஜிபி மற்றும் தென்மண்டல ஐ.ஜி. ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் புகாரின் அடிப்படையில் காவல்துறை பயிற்சிப்பள்ளி ஐஜி ஜெயகவுரி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை மாஜிஸ்திரேட் எம்.ஆனந்த் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதிமன்ற முந்தைய வழக்குகளின் அடிப்படையில், மதுரை மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இதனை விசாரிக்க வேண்டும். விசாரணையில் குற்றம் கண்டறியப்பட்டால், வழக்குப்பதிந்து அதற்கேற்ப விசாரணை நடத்தி, 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Tags : IG ,Crime Branch ,Madurai ,Police Training School ,Gunasekaran ,Kochadai, Madurai ,JM 1 court ,
× RELATED அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல்...