×

சிரப்களை வாங்க மருத்துவரின் பரிந்துரை கட்டாயம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: இனி மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே இருமல் மருந்து உள்பட அனைத்து சிரப்களும் வழங்கப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இருமல் மருந்து உட்பட அனைத்து வகை சிரப் மருந்துகளை பரிந்துரைச் சீட்டு இன்றி கடைகளில் நேரடியாக வாங்க முடியாது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் கலப்பட இருமல் மருந்தால் மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் வரை உயிரிழந்த நிலையில், அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மருந்தகங்களிலும் இந்த விதிமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு மருந்துகள் (5-வது திருத்த) விதிகள், 2026 மூலமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, வீட்டு உபயோக சாதாரண மருத்துவப் பொருட்களின் வரிசையில் இடம் பெற்றிருந்த ‘சிரப்ஸ்’ என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்த திரவ மருந்துகள் அனைத்தும், தற்போது கடுமையான மருந்து ஒழுங்குமுறைப் பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. டிரக்ஸ் டெக்னிக்கல் அட்வைசரி போர்டு (DTAB) உடன் கலந்தாலோசித்து, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-இன் பிரிவுகள் 12 மற்றும் 33-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த இறுதி அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

Tags : Union Government ,Delhi ,Union Health Ministry ,
× RELATED தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி...