மாமல்லபுரம்: உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கம் செய்து நகரம் முழுவதும் உள்ள அனைத்து தெருக்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டபடி சுற்றித்திரிந்து சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களை அச்சுறுத்தி வந்தன. இதில், வெறிநாய்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்துள்ளன. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும்போதும், சுற்றுலா பயணிகளை புராதன சின்னங்கள் பகுதியிலும் அச்சுறுத்தி வந்தன.
இந்த தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கு மாமல்லபுரம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாமல்லபுரம் நகராட்சிக்கு வழங்கப்பட்ட நாய்பிடிக்கும் வாகனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து, கடந்த மாதம் 12ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின் பேரில், செங்கல்பட்டு மண்டல இயக்குனர் அறிவுறுத்தலின்படி, மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா மேற்பார்வையில், தூய்மை ஆய்வாளர் குருசாமி தலைமையில், நேற்று நாய்களை பிடிக்கும் பணி தொடங்கியது.
பின்னர், பிடித்த நாய்களை திருக்கழுக்குன்றம் அடுத்த பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள மெட்ராஸ் விலங்குகள் மீட்பு சங்கத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, 3 நாட்கள் கழித்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விடப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும் என செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நாய்களை பிடிக்கும் பணியை தொடங்கிய நகராட்சி அதிகாரிகளுக்கும் மாமல்லபுரம்வாசிகள் நன்றி தெரிவித்தனர்.
