தூத்துக்குடி, ஜூன் 16: ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கில், எஸ்ஐ சரவணனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ். ஐடி ஊழியரான இவர், கடந்த 27.7.2025 அன்று நெல்லை கேடிசி நகர் பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் எஸ்ஐ சரவணனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. இதனை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
சாதி ரீதியான ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனே சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மண்டல துணைச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கவினின் தாய் தமிழ்ச்செல்வி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கவின் செல்வகணேசின் தாய் தமிழ்ச்செல்வி, மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தார்.
