சென்னை: தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்றுக் குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி வரை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், திருத்தணி, மதுரை நகரம், வேலூர், நாகை, தஞ்சை, கரூர் பரமத்தி, திருச்சி, நாமக்கல், பாளையங்கோட்டை ஆகிய 12 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேநேரம், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், கொத்தவாச்சேரி பகுதியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரியை ஒட்டியும் இருக்கக்கூடும். 18ம் தேதிவரை வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
