×

பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை தவெகவினரிடம் இருந்துதான் பெண்களை பாதுகாக்க வேண்டும்: பாஜக மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் பேட்டி

 

திருவண்ணாமலை, ஜூன் 15: திருவண்ணாமலையில் நேற்று பாஜக மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணைக்கட்ட ஒரு செங்கலை கூட வைக்க முடியாது. கர்நாடக மாநிலம் கொல்லூர் வரை சென்று வந்த முதல்வர் விஜய் மேகதாது அணை தொடர்பாக அந்த மாநில முதல்வரை தொலைபேசியிலாவது தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம். புதியதாய் பொறுப்பேற்றுள்ள இந்த ஆட்சியை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தான் இருந்தோம். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கெல்லாம் ஹனிமூன் பீரியட் தர முடியாது. பட்டுப்புடவை தருகிறேன், தங்க மோதிரம் போடுகிறேன், 2500 ரூபாய் நிதி உதவி தருகிறேன், சென்னை முதல் கன்னியாகுமரி வரை இலவசமாக பயணம் செய்ய முதல் கையெழுத்து போடுவேன் என்று சொன்னதை எல்லாம் செய்யாமல், நிதிநிலை அறிக்கைக்கு பதிலாக வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக சொல்கிறார். ரூ10 லட்சம் கோடி கடன் இருப்பது குழந்தைகளுக்கு கூட தெரியும்.

பெண் காவல்துறை அதிகாரிக்குகூட இங்கு பாதுகாப்பு இல்லை. கூட்டுப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி இருக்கிறார். சேலத்தில் ஒரு நபர் 50க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு இருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. தினமும்10 செய்திகளையாவது தவெக உறுப்பினர்கள் தொடர்புடைய இது போன்ற செய்திகள் வருகிறது. ஊருக்கு பத்து பேர் இதுபோல் கிளம்பி இருக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் மிரட்டல், சூளையில் பணம் கேட்டு மிரட்டல், கோயில் மணி திருட்டு எனத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதைக்கூட முதல்வரால் பார்க்க முடியவில்லை. 3 வயது முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

முதல்வரின் நேரடியாக கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இங்கே போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை. சிங்கப்பெண் படையை வைத்து முதலில் போலீசுக்குத்தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தவெகவினரிடமிருந்து தான் முதலில் பெண்களை பாதுகாக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த படையை ஏற்படுத்தப் போகிறார் முதல்வர் விஜய். ஒரு மாதத்தில் இது போன்ற சாதனைதான் இந்த ஆட்சியில் நடந்திருக்கிறது. சிறு பிள்ளைகளின் வெல்லாமை வீடு வந்து சேராது என்பார்கள்.

இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு அனுபவம் இல்லை. தொழில்துறை அமைச்சரே ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். ரிலீஸ் போட்டு முதலீடுகள் ஈர்த்து விட முடியுமா? ஆட்சிக்கு வருவதற்கு வேண்டுமானால் ரிலீஸ் பயன்படலாம். ஆட்சி நடத்துவதற்கு பயன்படாது. இந்த ஆட்சி கோமாளித்தனமாக இருக்கிறது. ஒருமுறைதான் ரீல்ஸ் பார்த்து மக்கள் ஏமாறுவார்கள். தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Tags : Thavekavis ,BJP ,vice president ,Dolphin Sridhar ,Tiruvannamalai ,Mekedadu Dam ,central government ,Kollur ,Karnataka ,
× RELATED விசில் அடித்து ஆட்சிக்கு...