×

ஓசூர் அருகே ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி மீட்பு: தீயணைப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே தென்பெண்ணை ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று இந்த ஆற்றின் நீர்ச் சூறாவளியில் மூதாட்டி ஒருவர் அடித்துச் செல்லப்படுவதை அப்பகுதி பொதுமக்கள் தற்செயலாகக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்த மூதாட்டி, அதிர்ஷ்டவசமாக ஆற்றின் நடுப்பகுதியில் இருந்த ஒரு பெரிய பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டார். அந்தப் பாறைகளை இறுகப் பற்றிக் கொண்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க அவர் உதவி கோரி சத்தமிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக பாகலூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கு அவசரத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த ஓசூர் தீயணைப்பு வீரர்கள், ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் இறங்கி, கயிறுகளின் உதவியுடன் பாறையில் சிக்கியிருந்த மூதாட்டியைப் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மூதாட்டிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ஆற்றில் எப்படி விழுந்தார்? போன்ற முழு விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Hosur ,Thenpennai River ,Bagalur ,Krishnagiri district ,
× RELATED முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை!