×

குற்றவாளிகளின் கூடாரமாக மாறியது; கொடூர குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் திணறும் தவெக அரசு: குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் கட்சியாக உருவெடுத்துள்ளதா தவெக?

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் தற்போது முதல்வராக விஜய் பதவி ஏற்றுள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் அடுத்தடுத்து அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அளவுக்கு கொடூர குற்ற சம்பவங்களும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அரங்கேறாத நாட்களே இல்லை என்ற அளவுக்கு உள்ளது. அதுமட்டுமல்ல இதுபோன்ற கொடூர சம்பவங்களில் கைதாகும் நபர்களை பற்றிய பின்புலங்களை விசாரித்தால் 90 சதவீதம் பேர் தவெகவினராகவே இருப்பது தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அதனால் தான் தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் பகிரங்கமாக நடந்து வரும் சூழலிலும், காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதல்வர் விஜய் எவ்விதக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் ‘சைலன்ட் மோடில்’ இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் சாடி வருகின்றனர். அதேபோன்று, தலைநகர் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை நடக்கும் தொடர் வழிப்பறிகள் மற்றும் கும்பல் வன்முறைகள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகளே தவெக அரசை எச்சரிக்கும் அளவுக்கு நிலமை கை மீறி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலமைக்கு பல்வேறு காரணங்களை அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்ட தேர்தல் பின்னணி அறிக்கையின்படி, தவெக சார்பில் போட்டியிட்ட 92 வேட்பாளர்கள் தம்மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்று தவெக சார்பில் சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள புதிய 41 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 19 பேர் மீது கொலை, கடத்தல் போன்ற மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியினரின் பயோடேட்டாவை பார்த்தால் தமிழகத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கிற்கு 90 சதவீதம் தவெகவினரே காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, தவெக தொடங்கிய போது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற அரசியல் கட்சிகளில் சேர முடியாமல் விரப்பட்ட கிரிமினல் வழக்கு கொண்ட பல நபர்கள், பணத்தை கொடுத்து தவெகவில் தஞ்சமடைந்துள்ளனர். முக்கிய பொறுப்புகளில் அவர்கள் தற்போது கோலோச்சி வருவதால், அவர்களின் எடுபிடிகள் எந்தவித பயமும் இல்லாமல் தங்களது குற்றங்களை அரங்கேற்றுகிற தகவலும் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

அதுமட்டுமல்ல, நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்களுக்கு உள்ளான சில நபர்களும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். ஆளுங்கட்சி என்ற லேபிளைப் பயன்படுத்தி, தங்களின் பழைய குற்றச் செயல்களை மூடி மறைக்கவே அவர்கள் தவெகவை அடைக்கலமாகத் தேர்வு செய்கிறார்கள் என்ற பரவலான விமர்சனமும் எழுந்துள்ளது. மேலும் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் சில முக்கியக் குற்றவாளிகள், தங்களைச் சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தவெகவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் இணைந்து வருவதாகவும் பரபரப்பு விவாதங்கள் எழுந்துள்ளன.

புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 15 நாட்களிலேயே 25க்கும் மேற்பட்ட கொலைகளும், 40க்கும் மேற்பட்ட கடுமையான குற்றச் சம்பவங்களும் பதிவாகி சலசலப்பை ஏற்படுத்தின. ஆர்.கே.நகர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தவெகவின் வார்டு செயலாளரான தினேஷ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பெண்களை பாதுகாப்பதே முதல் பணி என்று முழங்கிய முதல்வர் விஜய் இந்த சம்பவத்துக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

அடுத்து, தண்டையார்பேட்டையில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில், தவெகவின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் பலியானார். ஸ்ரீவைகுண்டத்தில், இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தவெக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஜெயபால் ஆகிய இருவர் போக்சோ, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, வழக்கை சமரசம் செய்ய முயன்றதாக தவெகவின் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரியுள்ளார். புதுக்கோட்டையில் அதிக லாபம் தருவதாகக் கூறி 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ.25 கோடிக்கும் மேல் பண மோசடி செய்த புகாரில், தவெகவின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் மதுபோதையில் காரை ஆபத்தான முறையில் ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்திய புகாரிலும் தவெக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சோழவந்தான் அருகே அரசு பேருந்துக்கு வழிவிடாமல் தகராறு செய்து, ஓட்டுநர் பிரசாந்த் என்பவரை பட்டாக்கத்தியால் தலையில் வெட்டிய வழக்கில் தவெக நிர்வாகி தனுஷ்கோடி போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார் கும்பகோணத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பதைத் தடுத்த காவலர்களைத் தாக்கி கையை உடைத்ததாக தவெக உள்ளூர் பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் திருவிடைமருதூரில் பெண் மற்றும் குழந்தையை அத்துமீறி வீட்டிற்குள் வைத்து பூட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தவெக நிர்வாகி சண்முகம் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அனைத்து சம்பவங்களுக்கும் உச்சமாக தற்போது தமிழகத்தைேய உலுக்கி வரும் ஆபாச வீடியோ சம்பவத்திலும் தவெக பிரமுகரே ஈடுபட்டிருப்பது தவெக அரசு மீது கடும் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகர் மணிகண்டன் என்பவர், பெண்களின் ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகரப் பகுதியில், சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வைத்தே மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் மணிகண்டன் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி சம்பவத்தைப் போல பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியெடுத்துள்ளது.

இப்படி ஒவ்வொரு கொடூர சம்பவங்களும் தவெக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு வருவது தமிழக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் எடுத்து கொள்ளலாம், ஆனால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு சட்ட ஒழுங்கை சரி செய்யாமல் அலட்சியம் காட்டுவதோடு, முதல்வர் விஜய் மவுனம் சாதிப்பது மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளிகளை தவெகவில் சேர்ப்பதை தடுத்தாலே பாதி குற்ற சம்பவங்கள் குறைந்த விடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tags : Dwega ,Chennai ,Tamil Nadu ,Daveka ,Vijay ,Dimuka alliance ,Dweka ,
× RELATED முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை!