விசாரணைக்கு வந்த இளம்பெண்ணுக்கு செல்போனில் ‘ஜொள்ளு’ விட்ட போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

ஆறுமுகநேரி: தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அந்த புகாரில் குறிப்பிட்டவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு கணவரை பிரிந்து தனிமையில் வாழும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 36 வயது இளம்பெண் ஒருவரும் வந்தார்.

அவரது செல்போன் எண்ணை கேட்டு வாங்கிக் கொண்ட ஏட்டு அக்னிமுத்து, கடந்த 5ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் செல்லுக்கு ஜொள்ளு மெசேஜ்களை அனுப்பியுள்ளார். தன்னுடைய போட்டோக்கள் சிலவற்றையும் அனுப்பியதாகவும் வீடியோ காலில் அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சமூக சேவகி ஹனிதா பேகத்திடம் புகார் கூறினார்.

இதையடுத்து அவர் ஏட்டு அக்னி முத்துவை நேற்று முன்தினம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு தட்டிக் கேட்டுள்ளார். தற்போது அந்த ஏட்டு – சமூக சேவகி மொபைல் போன் உரையாடல் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து ஏட்டு அக்னிமுத்துவை தூத்துக்குடி எஸ்.பி. அபிஷேக்குப்தா நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஏற்கெனவே சிங்கப்பெண் போலீசுக்கு டார்ச்சர் கொடுத்ததாக இன்ஸ்பெக்டர் திலீபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: