சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 4.50% கொழுப்புச் சத்துக் கொண்ட ஆவின் பச்சை பால் விற்பனை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் லிட்டருக்கு ரூ.24 வரை கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.
ஆவின் பச்சைப் பாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு ரூ.51 ஆவதாகவும், ஆனால் சந்தையில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டர் பச்சைப் பால் விற்பனையில் லிட்டருக்கு ரூ.7 வரை இழப்பு ஏற்படுவதாகவும் இதை சமாளிக்க முடியாமல் தான் பச்சைப்பால் வணிகத்தை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இழப்பைக் காரணம் காட்டி மக்களால் அதிகம் விரும்பப்படும் பாலின் வணிகத்தைக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
தமிழ்நாட்டில் மிக அதிக மானியத்தில் விற்பனை செய்யப்படும் பால் ஆவின் பச்சைப் பால் தான். இந்த வகை பாலை தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.68 வரை விற்பனை செய்யும் நிலையில், ஆவின் நிறுவனம் ரூ.44க்கு விற்பனை செய்கிறது. இதனால் ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாமல் தான் பச்சைப் பால் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் முயன்று வருகிறது.
ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, அதன் தடையற்ற வினியோகத்தை ஆவின் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
