சல்மான் கான் பண்ணை வீட்டு விவகாரம்; அவதூறு செய்யும் உரிமை யாருக்கும் இல்லை: மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்

 

மும்பை: சமூக வலைதளங்கள் மூலம் பிறரை அவதூறு செய்ய யாருக்கும் உரிமை இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையின் பன்வெல் பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இதன் அருகே நிலம் வைத்துள்ள கேதன் கக்கட் என்பவர், சல்மான் கான் தனது பண்ணை வீடு கட்டுமானத்தின் போது சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகவும், தனது நிலத்திற்கு செல்லும் பாதையை தடுத்ததாகவும் புகார் கூறி சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டார்.

இதனை எதிர்த்து சல்மான் கான் தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி ஷர்மிளா தேஷ்முக், ‘சமூக வலைதளங்களை அணுகும் வசதி இருப்பதால் எவர் ஒருவரையும், அவர் சாதாரண குடிமகனாக இருந்தாலும் அல்லது பிரபலமாக இருந்தாலும் அவதூறு செய்ய உரிமை இல்லை’ என்று தெரிவித்தார். மேலும், புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர, ஏன் வீடியோக்களாக பதிவேற்ற வேண்டும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

குறிப்பிட்ட சமூக வலைதள பதிவுகள் அவதூறானவையா என்பதை முடிவு செய்வதில் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என குறிப்பிட்ட நீதிபதி, அந்த வீடியோக்களை நீக்குவது குறித்து கேதன் கக்கட் பரிசீலிக்க வேண்டும் எனக்கூறி வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: