×

அமெரிக்க ராணுவ தாக்குதலில் பலியான 3 இந்தியர்களின் உடல்கள் கண்டெடுப்பு: குடும்பத்தினர் சோகம்

 

தேவரியா: ஓமன் கடற்பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது கடந்த 10ம் தேதி அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. ஒரு வெளிநாட்டு கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த எண்ணெய் டேங்கர் கப்பலில், உத்தரப் பிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்த் சவுராசியா (35) என்பவர் இன்ஜின் பிட்டராகப் பணியாற்றி வந்தார். இந்தத் தாக்குதலின் போது கப்பலில் மொத்தம் 24 இந்திய மாலுமிகள் இருந்துள்ளனர்.

அவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சிவானந்த் உட்பட மூன்று இந்தியர்கள் மாயமாகினர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், உயிரிழந்த மூன்று இந்தியர்களின் உடல்களும் நேற்று கண்டெடுக்கப்பட்டன. பலியான சிவானந்த் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தான் மும்பைக்குச் சென்று இந்த வெளிநாட்டு நிறுவன வேலையில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை ராம்ஜி சவுராசியா கூறுகையில், ‘நேற்று முன்தினம் இரவு தான் அவனிடம் செல்போனில் பேசினோம், அப்போது எல்லாம் நலமாக இருப்பதாகக் கூறினான்.

ஆனால் தற்போது அவன் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது’ என்று கண்ணீருடன் தெரிவித்தார். உயிரிழந்த சிவானந்திற்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தத் கொடூரத் தாக்குதல் தொடர்பாக ஒன்றிய அரசு அமெரிக்காவிடம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கக் கடற்படை இந்திய மாலுமிகள் இருந்த கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கியதை ஒன்றிய அரசு முதல் முறையாகப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.

Tags : US ,Deoria ,Uttar Pradesh ,Gulf of Oman ,US military ,
× RELATED அளவிற்கு மேல் நச்சுத் தன்மை வாய்ந்த...