புதுடெல்லி: பஞ்சாபில் 2001ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக இழப்பீடு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில்,’வீட்டுப் பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள் என்ற கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம். வீட்டுப் பராமரிப்பில் ஈடுபடும் பெண் தேசத்தை உருவாக்குகிறார்.
எனவே, தேசத்தை உருவாக்கும் அந்தப் பெண்ணின் வீட்டுப் பராமரிப்புச் சேவை இழப்பிற்கான குறைந்தபட்ச மாத வருமான மதிப்பை ரூ. 30,000 என நாங்கள் நிர்ணயித்துள்ளோம். எதிர்காலத்தில், குடும்பத் தலைவியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ‘வீட்டுப் பெண்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘தேசத்தை உருவாக்குபவர்’ என்ற சொல் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்க செல்ல வேண்டிய தூரம் இன்னும் வெகுவாக உள்ளது’ என்று தெரிவித்தனர்.
