மதுரை: ஆதவ் அர்ஜூனாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென அமலாக்கத்துறை அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், கமுதியை சேர்ந்த வழக்கறிஞர் நீலமேகம் ஆகியோர் மதுரை அமலாக்கத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக ஆதவ் அர்ஜூனா உள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தார்.
அந்த காலகட்டத்திலும் அதற்குப் பிறகும் வெளிமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் லாட்டரிகள் விற்பனை செய்தது தொடர்பாக ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி, மாமியார் லீமாரோஸ் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. இது சம்பந்தமாக கேரள அமலாக்கத்துறையினர் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமாரோஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் அவரும் குற்றவாளியாக இருக்கிறார். ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜூனாவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மீது இந்திய தேசத்திற்கு எதிராக பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவர் அமைச்சராக பதவியை தொடர்வது நியாயமற்றது.
ஆதவ் அர்ஜூனாவிற்கு சொந்தமான தமிழ்நாட்டிலுள்ள கோடிக்கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையிலும் விசாரணையில் இருக்கிறது. எனவே, சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கும், அவர் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வசதியாக அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கம் செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அப்போது தான் சுதந்திரமாக விசாரணை நடத்த முடியும்.
ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் மீது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தபோது, அவர் அமைச்சர் பதவியில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீக்கப்பட்டார். எனவே, ஆதவ் அர்ஜூனாவை அமைச்சர் பதவியில் இருந்து உடன் நீக்குமாறு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் மனுவை டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். அமைச்சரை பதவி நீக்கம் செய்யக்கோரி அமலாக்கத் துறையிடம் வழக்கறிஞர்கள் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜூனாவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மீது இந்திய தேசத்திற்கு எதிராக பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவர் அமைச்சராக பதவியை தொடர்வது நியாயமற்றது.
