பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் தவெக எம்எல்ஏ பேசும் ஆடியோ வைரல்

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி. இவரது நண்பர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபால். இவரும் தவெக நிர்வாகி. இருவரும் தவெகவை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்திருநகரி பகுதி இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக கூறி காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அவரை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகியோரை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், தவெக எம்எல்ஏ சரவணன் பெயரை சொல்லி தான் என்னை அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர் என்றும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் எம்எல்ஏ சரவணன் மீது புகார் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தன் மீதும், தவெக மீதும் திட்டமிட்டு சிலர் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாக சரவணன் எம்எல்ஏ விளக்கமளித்தார்.

இதனிடையே தவெக பெண் நிர்வாகி பாலியல் பலாத்கார வழக்கில் வெளியாகி உள்ள ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்எல்ஏ சரவணனுடன் பாதிக்கப்பட்ட பெண் செல்போனில் பேசும்போது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பலர் தன்னை மிரட்டுவதாகவும், அவதூறாக பேசுவதாகவும் புகார் தெரிவிக்கிறார்.

இது எதுவுமே எனக்குத் தெரியாது என மறுத்து பேசும் சரவணன் எம்எல்ஏவிடம், தான் பணம் கொடுக்க வேண்டிய நபர்கள் டெய்லி வீட்டில் வந்து அமர்ந்து வெளியே செல்ல மறுத்து வெளியே செல்ல முடியாத அளவுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்று கதறி அழுகிறார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பின் பேட்டியளித்த பெண், இதுவரை எம்எல்ஏ என்னை தொடர்பு கொண்டு பேசவே இல்லை என குற்றம்சாட்டி இருந்த நிலையில், பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பேசும் ஆடியோ மட்டும் வெளியாகி உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

Related Stories: