சென்னை: காவேரி மருத்துவமனை மலக்குடல் புற்றுநோய்க்கு ரோபோடிக் முறையில் வெற்றிகர அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, அதிக உடல் பருமன் மற்றும் மருத்துவ ரீதியாக அதிக ஆபத்துகளைக் கொண்ட 45 முதல் 60 வயதுக்குட்பட்ட மூன்று நோயாளிகளுக்கு, சிக்கலான ரோபோடிக் குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
ஒவ்வொரு நோயாளியும் 100 கிலோவுக்கும் அதிகமான எடையுடன், 38-40க்கும் மேற்பட்ட பிஎம்ஐ அளவை கொண்டிருந்தனர். அத்துடன் நீரிழிவு நோய், இதய பிரச்னைகள், முன்பு செய்யப்பட்ட வயிற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை போன்ற இணை பாதிப்புகளையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த கூடுதல் சவால்களுக்கு மத்தியிலும், மூன்று நோயாளிகளும் விரைவாகக் குணமடைந்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான்கு நாட்களிலேயே வீடு திரும்பினர்.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனை டாக்டர் சுவாமிநாதன் சம்பந்தம் கூறியதாவது: நோயாளிகளின் உடல் பருமன் மற்றும் பிற மருத்துவப் பிரச்னைகளால், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளாக இவை அமைந்திருந்தன. அதிக உடல் பருமன் உள்ள நோயாளிகளுக்கு, குறிப்பாக ஏற்கனவே அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, இடுப்புப் பகுதியின் ஆழத்தில் புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினமானது.
எனினும், ரோபோடிக் அறுவை சிகிச்சையானது மேம்பட்ட துல்லியத்தையும், சிறப்பான காட்சிப்படுத்தலையும், மருத்துவர்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாட்டையும் வழங்குவதால், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை காயங்கள் பெருமளவு குறைக்கப்படுகின்றன; அத்துடன், அதிக பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முறை விரைவாக குணம்பெறவும் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
