ஜனப்பன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை புதிதாக போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை சேதம்

 

ஊத்துக்கோட்டை: சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.32 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்தது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே புதிதாக போடப்பட்ட சாலை, பெரியபாளையம் அருகே பனப்பாக்கம், ஜெயபுரம், ஆத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலை அமைத்து 8 மாதத்திலேயே சேதம் அடைந்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால் மீண்டும் தாங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதை உடனே சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஜனப்பன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை கடந்த வருடம் ரூ.32 கோடி மதிப்பீட்டில் சாலை போடப்பட்டது. இந்த சாலை ஜெயபுரம் மற்றும் பனப்பாக்கம், ஆத்துப்பாக்கம் பகுதிகளில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நாங்கள் இரவில் இந்த வழியாக பைக்கில் செல்லும்போது கீழே விழுந்து காயம் அடைகிறோம். எனவே விரைவில் இந்த பகுதியில் சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

 

Related Stories: