×

கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் தமிழ்நாட்டில் குடிக்க தண்ணீர் கிடைக்காது: அன்புமணி பேட்டி

 

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை பயணிகள் விமானம் மூலமாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி புதுடெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்னை காவிரி நதிநீர் பங்கீடு. இந்தியாவில் உள்ள இரு மாநில நதிநீர் பங்கீட்டு உடன்படிக்கையின்படி, முதல் மடை மாநிலத்தில் ஏதாவது கட்டுமான பணிகள் செய்வதானால், பிற கடைமடை மாநிலத்தின் அனுமதியில்லாமல் செய்யக்கூடாது என்பது விதி.

இந்த விதி, இந்தியா உள்பட உலகளவிலும் செயல்பட்டு வருகிறது. எனினும், தமிழ்நாட்டின் அனுமதி இன்றி, கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அரசின் சார்பில் டிபிஆர் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசு தரப்பில் அனுமதி கொடுத்தது தவறு. இதற்கிடையே, தமிழ்நாட்டில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக, வரும் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன்முறையாக வரும் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், மேட்டூர் அணையில் தற்போது 40 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இங்கு தண்ணீரை திறந்துவிட வேண்டுமெனில், மேட்டூர் அணையில் குறைந்த 90 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பினால்தான் திறக்க முடியும். இச்சூழலில், கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே மற்றொரு புதிய அணையை அம்மாநில அரசு கட்டி, தமிழ்நாட்டில் குடிப்பதற்குகூட தண்ணீர் இல்லாத அவலநிலை ஏற்படும். இது, தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி.

இப்பிரச்னை குறித்து இன்று டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய், நாளைய நிதி ஆயோக் கூட்டத்தில் குறிப்பாக பேசவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Karnataka government ,Tamil Nadu ,Anbumani ,Dr. ,Anbumani Ramadoss ,New Delhi ,Chennai airport ,Cauvery river ,
× RELATED தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; பாமக...