சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான பாரதிராஜா, சென்னையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவு தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், தமிழ் திரையுலகில் “இயக்குனர் இமயம்” எனப் போற்றப்பட்ட, எண்ணற்ற மறக்க முடியாத படைப்புகள் மூலம் தமிழ் மக்களின் இதயங்களில் நிலையான இடம்பிடித்த மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த துயரத்துடனும் அவருடைய திருவுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தினேன் என்று குறிப்பிட்டு உள்ளார். அவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக சகோதரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் அவரது ஆன்மா இறைவன் திருவடியில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் பதிவிட்டு உள்ளார்.
