இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜா அவர்களை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அவர் படைத்த புதுமைகளும் சாதனைகளும் ஏராளமானவை. தேனி அல்லிநகரத்திலிருந்து திரைத்துறை குறித்த ஏராளமான கனவுகளுடன் வந்த பாரதிராஜா அவை அனைத்தையும் நனவாக்கினார். நீரோட்டத்துடன் பயணித்தால் தான் வெற்றி எளிது என்ற இலக்கணத்தைத் தகர்த்த பாரதிராஜா, படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே அடங்கிக் கிடந்த திரைப்பட உருவாக்கத்திற்கு விடுதலை கொடுத்து, கிராமங்களுக்கு கொண்டு சென்றார்; நாயகனும், நாயகியும் அழகாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை உடைத்து மிகச் சாதாரணமானவர்களையும் நாயக, நாயகிகளாக்கி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்ட பெரும்பன்மையான விருதுகளை வாங்கிக் குவித்தவர் அவர். அவரது முதல் படைப்பின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவிருந்த நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்திருப்பது திரையுலகுக்கு பெரும் இழப்பாகும். தமிழ்த் திரையுலகம் வாழும் வரை இந்த மாபெரும் திரைக்கலைஞர் போற்றப்படுவார். இயக்குனர் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாரதிராஜா மறைவு தமிழ் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். எண்ணற்ற கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி, பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. ‘தமிழ்ச்செல்வன்’ திரைப்படத்தின் மூலம் விஜயகாந்த், பாரதிராஜா இணைந்து பணியாற்றிய நினைவுகள் தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
