காங்கிரஸ் பரிந்துரைத்தவர்களை அரசு வக்கீலாக்க மாட்டோம்: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு விளக்கம்

மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஐகோர்ட் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் எந்தெந்த நீதிமன்றங்களில் யார் யாரை நியமிக்க வேண்டும் என தனது கட்சிக்காரர்களை பரிந்துரைத்து, சட்ட அமைச்சர் நிர்மல்குமாருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் சட்ட விரோதம். அரசியல் தலையீடு இல்லாமல் உரிய தகுதி உடைய வழக்கறிஞர்களை மட்டுமே நியமனம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், ‘‘இந்த கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்கள் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட மாட்டார்கள்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், இந்த கடிதம் குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: