- நாங்குநேரி
- Kalakkad
- நெல்லா மாவட்டம்
- செண்பகராமநல்லூர்
- இளையார்குளம்
- காக்கா குளம்
- நொச்சிக்குளம்
- தென்னவனேரி
- கீதா நாச்சன்குளம்
- மேல்
களக்காடு: நாங்குநேரி அருகே கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூர், இளையார்குளம், காக்கை குளம், நொச்சிக்குளம், தென்னவநேரி, கீழ நாச்சான்குளம், மேல நாச்சான்குளம், சேவகன்குளம், கல்வெட்டான் குழி, அனுமார் புதுக்குளம் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூலைக்கரைப்பட்டியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தினசரி பஸ்களில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி வழித்தடத்தில் போதிய அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஒடிக் கொண்டிருந்த பஸ்சையும் நிறுத்தியதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரங்களில் செல்ல முடியாமல் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதேபோல் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும், பஸ் வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் பஸ்களில் கூட்ட நெரிசலால் இடமின்றி படிக்கட்டுகளில் தொங்கியபடி அபாயகரமான பயணத்தை மேற்கொள்ள வேண்டியதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி வழித்தடத்தில் உள்ள கிராம மக்களும் பஸ் வசதி இன்றி பரிதவித்து வருகின்றனர். வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதற்கிடையே நேற்று மாலை இளையார்குளம் பஸ் நிறுத்தத்தில் திரண்ட மாணவர்கள் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்., அப்போது மாணவர்கள் நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும், குறிப்பாக காலை, மாலை வேளைகளில் மாணவர்கள் சிரமமின்றி பயணம் செய்ய பஸ்கள் விட வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அந்த வழியாக 1 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், ‘நாங்குநேரி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் பஸ் போக்குவரத்து கேள்வி குறியாகி வருகிறது. ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களையும் போக்குவரத்து கழகத்தினர் தொடர்ச்சியாக நிறுத்தி பயணிகளை வஞ்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் நெல்லை எம்பி. நாங்குநேரி எம்.எல்.ஏ. தலையிட்டு பஸ் போக்குவரத்தை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
