×

கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி மீனவ பெண்கள் போராட்டம்: அமைச்சருக்கு எதிராக கோஷம்: பதற்றம், போலீஸ் குவிப்பு

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும், நடுக்குப்பம் மீனவர்களுக்கும் இடையே சுடுகாடு இடப்பிரச்னை நீண்டநாட்களாக இருந்தது. இந்த நிலையில் இருதினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்ட நிலையில், அவரது சடலத்தை அடக்க செய்ய சென்றபோது மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சடலத்துடன் ஆதிதிராவிட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள் எதிர்தரப்பினரின் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து சேதப்படுத்தி ஆட்களை தாக்கியதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக மீனவர்கள் தரப்பில் 30 பேர் மீது கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று வானுார் தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், கோட்டாட்சியர் முருகேசன் பேசுகையில், மயான இடத்தில் 21 பழுதடைந்த படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை இரு நாட்களில் அகற்ற வேண்டும். இவர்களுக்கு படகுகளை நிறுத்தி கொள்ள கடற்கரையையொட்டி விரைவில் இடம் ஒதுக்கி தரப்படும். மயானம் இடத்தை ஏற்கனவே அளவீடு செய்துள்ளோம். இந்த இடத்தில் எல்லை கல் நடப்படும் எனத் தெரிவித்தார். இதன்மூலம் இடுகாடு இடப்பிரச்னைக்கு சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் 100க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் நடுக்குப்பம் கடற்கரையில் படகுகள் நிறுத்தப்பட்ட இடத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்கு நின்றபடி தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிய நிலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசிக அமைச்சர் வன்னிஅரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தகவல் கிடைத்து அங்குவந்த கோட்டக்குப்பம் போலீசார், பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த கயிற்றை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

Tags : Villupuram ,Villupuram district ,Vanur taluka ,Periya Kottakuppam ,Adi Dravidar ,Nadukuppam ,
× RELATED “உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு...