போதை கடத்தலில் தொடர்பு; ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

 

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்டின் ஆகியோர் போதை பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் வெளியாகி உள்ளது. போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜான் பிரிட்டோ பல ஆண்டுகளாக ஈடுபட்டு பல ஆயிரம் கோடி பரிவர்த்தனை நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஜான் பிரிட்டோ, லீமா ரோஸ் மார்ட்டின், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி மீது கேரளாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. முதல்வர் விஜய் ஊழல் இல்லாத ஆட்சி, போதை பொருள் இல்லாத ஆட்சி என்ற வாக்குறுதி கொடுத்துள்ளார். எனவே, விஜய் அமைச்சரவையில் உள்ள ஆதவ் அர்ஜுனா அமைச்சரவையில் இருப்பது சரியா? என கேள்வி எழுந்துள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நிரபராதி என நிரூபிக்கும் வரை ஆதவ் அர்ஜூனாவை அமைச்சர் பதவி மட்டுமின்றி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இந்த விஷயத்தில் விஜய் மவுனமாக இருக்க கூடாது. கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுத்த பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: