×

மீனவர்களுக்கான ரூ.12,000 தடைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

 

சென்னை: மீனவர்களுக்கான ரூ.12,000 தடைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மீனவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் செய்யது அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலையும், கடல் சார்ந்த தொழிலையும் மட்டுமே நம்பி வாழும் லட்சக்கணக்கான மீனவப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் தற்போதைய மீன்பிடி தடைக்காலத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கடலின் வளத்தைப் பெருக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும் அமல்படுத்தப்படும் இந்தத் தடைக்காலத்தில், மீனவக் குடும்பங்கள் வருமானமின்றித் தவித்து வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டுதான் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலப் பாதுகாப்பு நிவாரண நிதி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்காலப் பாதுகாப்பு நிவாரண நிதியை ரூ.8,000-லிருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்குவோம் எனத் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக தங்களின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போதைய மீன்பிடி தடைக்காலம் தொடங்கிப் பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டவாறு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகை வழங்குவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அரசு இதுவரை வெளியிடவில்லை.

விலைவாசி உயர்வு, அன்றாடத் தேவைகளுக்கான செலவுகள் மற்றும் படகு பராமரிப்புச் செலவுகள் எனப் பலமுனை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மீனவக் குடும்பங்கள், இந்த நிவாரண நிதியைப் பெரிதும் நம்பியுள்ளன. தடைக்காலம் தொடங்கி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலிலும், இன்னும் வாக்குறுதி அளித்த உரிய தொகை மீனவ மக்களைச் சென்றடையாதது அவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மீனவ மக்களின் நியாயமான தேவையை உணர்ந்து, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.12,000 மீன்பிடி தடைக்காலப் பாதுகாப்பு நிவாரண நிதியை எந்தவித நிபந்தனையுமின்றி, காலதாமதத்தைத் தவிர்த்து, தகுதியுள்ள அனைத்து மீனவக் குடும்பங்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனத் தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி மீனவர் அணி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : STBI party ,Tamil Nadu government ,Sidhu Ahmed ,
× RELATED தமிழ்நாட்டில் நெல்லை, கோவை,...