கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிற்கு அமலாக்கத்துறை சம்மன்!!

திருவனந்தபுரம்: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி. வீணா விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் என்ற மணல் அகழ்வு நிறுவனம் மற்றும் வீணாவின் செயல்பாட்டில் இல்லாத நிறுவனமான ‘எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ ஆகியவற்றுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுகிறது. பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் சிஎம்ஆர்எல் நிறுவனம் ‘எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ.2.78 கோடி மதிப்பிலான மோசடியான தொகையை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சிஎம்ஆர்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சசிதரன் கார்த்தா நிர்வகிக்கும் ‘எம்பவர் இந்தியா கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற மற்றொரு நிறுவனமும், ‘எக்ஸாலஜிக்’ நிறுவனம் உரிய நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய நிலையிலும், அதற்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான கடனை வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதனையடுத்து, பினராயி விஜயனின் மகள் வீணா, அமலாக்கத் துறை முன்பு ஜூன் 12 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை முன்பு அவர் ஆஜரானதும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும். இந்த விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் உள்ளிட்ட 9 பேருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories: