உக்ரைனின் வடகிழக்குப் பகுதியான கார்கிவ்வில் நடந்த ரஷ்யத் தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளார். 10 பேர் காயமடைந்துள்ளனர். “எதிரிகள் சுகுயிவ் நகரைத் தாக்கியுள்ளனர்,” என கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் டெலிகிராமில் எழுதியதோடு, 22 வயதுப் பெண் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
“இந்தத் தாக்குதல்களால் தீ விபத்துகள் ஏற்பட்டன, குறைந்தது 18 வாகனங்கள் சேதமடைந்தன; குடியிருப்புப் பன்னடுக்குக் கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறின, கட்டிட முகப்புகளும் சேதமடைந்தன,” என்று சினேகுபோவ் கூறினார்.
இதற்கிடையில், கார்கிவ் நகர மேயர் இகோர் தெரெகோவ், தனது நகரில் 10 பேர் காயமடைந்ததாகத் தெரிவித்தார். பொதுமக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தும் தினசரி ரஷ்யத் தாக்குதல்கள் சமீபத்திய மாதங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் ரஷ்யப் பகுதிக்குள் மேலும் ஊடுருவித் தனது சொந்த ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்திப் பதிலடி கொடுத்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் இராணுவ மற்றும் எரிசக்தி வசதிகளை இலக்காகக் கொண்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா. மதிப்பீட்டின்படி, பிப்ரவரி 2022-ல் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து உக்ரேனியப் பகுதிகளில் குறைந்தது 15,850 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 2,800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா.வின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் 44,800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.
