கோவை: கோவையில் துடியலூர், வடவள்ளி, மருதமலை மற்றும் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கமான பயண சேவையை முடித்துவிட்டு மினி பஸ்சை டிரைவர், கண்டக்டர் துடியலூர் அருகே சாலையோரமாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவு 12 மணி அளவில், ஆள் நடமாட்டமில்லாத நேரத்தில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் பஸ்சிற்குள் ரகசியமாக ஏறினர்.
அங்கும், இங்கும் நோட்டமிட்ட அவர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை கவனித்தனர். உடனே அந்த வாலிபர், கேமராவை யாரும் பார்க்காத திசைக்கு திருப்பிவிட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராவை மறைத்த தைரியத்தில் இருவரும் பஸ்சிற்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் செல்லும் போது பஸ்சில் இருந்த பேட்டரி மற்றும் பயணிகள் அமரும் இருக்கையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காலையில் பணிக்கு வந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சிலிருந்த இருக்கை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சிசிடிவி கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் வாலிபரும், இளம்பெண்ணும் பஸ்சில் வந்து கேமராவை திருப்பி வைத்ததும், இருக்கையை எடுத்து சென்றதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த சிசிடிவி காட்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
