‘‘இத்தோடு செத்து தொலைங்கடா’’ எனக் கூறி காரைக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது; 3 பேர் எஸ்கேப்

காரைக்குடி: ‘‘இத்தோடு செத்து தொலைங்கடா’’ எனக் கூறி காரைக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ஒருவர் கைதானார். தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சேர்வார்ஊரணி பகுதியை சேர்ந்தவர் சந்தானகுமார் (50). இவரது தாயார் வீட்டின் முன்பு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தானகுமாருக்கும், சேர்வார்ஊரணியை சேர்ந்த அசோக் (23), மணிசரன், அமீர் உள்ளிட்ட 4 பேருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை சந்தானகுமாரை தேடி வந்த அவர்கள், டீக்கடையில் இருந்து சந்தானகுமாரின் தாயாரிடம் பிரச்னை செய்துள்ளனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து கிளம்பினர். இரவு 2 டூவீலர்களில் வந்த அவர்கள், ‘‘இத்தோடு செத்து தொலைங்கடா’’ எனக் கூறி, தகாத வார்தைகளால் பேசி 2 பெட்ரோல் குண்டுகளை சந்தானகுமாரின் வீட்டின் மீது எறிந்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் வீட்டின் முன்பக்க பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அணைத்துள்ளனர். புகாரின்பேரில், காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிந்து அசோக்கை கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருக்கோஷ்டியூரில் நடந்த பிரச்னை ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்தகவலை சந்தானகுமார் தான், போலீசுக்கு கூறியிருக்கலாம் எனக்கருதி அவரிடம் அடிக்கடி பிரச்னை செய்துள்ளனர். இதையடுத்தே வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியுள்ளனர்’’ என்றனர்.

தொடரும் சம்பவங்களால் மக்கள் கலக்கம்
கடந்த சில மாதங்களுக்கு முன் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் காதலித்த பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த காதலன் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க பார்த்தார். தற்போது, முன்பகை காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதுபோன்று தொடர்ந்து பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: