குமரியில் காவல் நிலையம் முன்பே இன்ஸ்டாகிராம் காதலிக்காக கல்லூரி மாணவர்கள் மோதல்

கருங்கல்: கருங்கல் அருகே இன்ஸ்டாகிராமில் பேசிய பெண்ணை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் காவல் நிலையம் முன்பு மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருங்கல் அருகே தொலையாவட்டம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும் கோணம் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 6 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த 20 வயது மாணவரும் அதே மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்து உள்ளார். அவருக்கு தொலையாவட்டம் பகுதி மாணவரும் அந்த மாணவியுடன் பேசுவது தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த அவர் இன்ஸ்டாகிராமில் சாட் மூலம் அந்த மாணவரை தொடர்பு கொண்டு, எப்படி நான் பேசும் பெண்ணிடம் நீ பேசலாம் என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி வசைபாடி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் 2 பேரும் நேரில் பேசி பிரச்னைக்கு முடிவு கட்டலாம் என கூறியுள்ளனர்.

அப்போது தொலையாவட்டம் மாணவர், நீ கருங்கலுக்கு வா பேசலாம் என அழைத்துள்ளார். இதையடுத்து ஆரல்வாய்மொழி மாணவர் தனது நண்பர்கள் 6 பேருடன் நேற்று முன்தினம் கருங்கல் போலீஸ் நிலையம் முன்பு சென்று தொலையாவட்டம் மாணவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். தொடர்ந்து அவரும் தனது நண்பர்கள் சிலருடன் அங்கு சென்றார். ஒரே மாணவிக்காக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். சிலர் அங்கு கிடந்த கற்களை எடுத்து வீசி தாக்கினர். இதனால் காவல் நிலைய பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டரின் வாகனம் காவல் நிலையத்துக்கு வந்தது. இதில் ஒருவர் வீசிய கல், போலீஸ் வாகன கண்ணாடியில் பட்டு உடைந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இருதரப்பு வாலிபர்களையும் மடக்கி பிடிக்க முயன்றனர்.

போலீசாரை கண்டதும் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் தொலையாவட்டத்தை சேர்ந்த 4 வாலிபர்களையும் மற்றொரு தரப்பை சேர்ந்த 2 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர். பிடிபட்ட 6 பேரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பேசிய பெண்ணுக்காக 2 கல்லூரி மாணவர்கள் தங்களது நண்பர்களுடன் காவல் நிலையம் முன்பே தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் கருங்கலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: