விருதுநகர், ஜூன் 9: விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை ஐஜிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி தமிழகம் முழுவதும் 62 சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் விருதுநகர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ரூ.54,000 பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனையின் போது விருதுநகர் சார்பதிவாளர் ஜன்னத்துல் பிர்தௌஸ் அலுவலகத்தில் தனது இருக்கையில் இல்லை. வெளியில் சென்றிருந்த அவர் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையறிந்து உடன் அங்கிருந்து நழுவிச் சென்றதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்துள்ளனர்.
