×

6 நாட்களுக்கு பிறகு பரங்கிப்பேட்டை மீனவர்கள் 3 பேர் உயிருடன் மீட்பு

கடலூர், ஜூன் 9: ஆறு நாட்களுக்கு பிறகு மாயமான பரங்கிப்பேட்டை மீனவர்கள் உயிருடன் மீட்கபட்டதால், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை சண்முகாநகர் பகுதியை சேர்ந்த ரவி (எ) ரமேஷ் (28), அதே பகுதியை சேர்ந்த மனோகர் (27), புதுவை மாநிலம் கனகசெட்டிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த நாகவேல் (40). மீனவர்களான இவர்கள் கடந்த ஜூன் 2ம் தேதி மதியம் புதுப்பேட்டை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வீரவேல் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மறுநாள் 3ம் தேதி கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் அவர்களை, படகில் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை கடலூர் அடுத்த சோனாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் தத்தளித்தபடி படகு நின்று கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது, மாயமான 3 மீனவர்களும் படகில் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து படகை தங்களது படகுடன் கட்டி இழுத்து வர முயன்றும், உடனடியாக முடியவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகள் கரையில் 108 ஆம்புலன்சுடன் தயார் நிலையில் இருந்தனர்.இதையடுத்து 3 பேரையும் தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு கரைக்கு திரும்பினர். கரை திரும்பியவுடன் 3 மீனவர்களும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை கடலூர் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்கள் 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டதால், அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Parangipettai ,Cuddalore ,Ravi (A) Ramesh ,Shanmuganagar ,Parangipettai C.Pudupettai ,Cuddalore district ,Manohar ,Puduvai… ,
× RELATED தமிழக அரசுக்கு எதிராக கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்