செஞ்சி, ஜூன் 9: தற்காலிக ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக செஞ்சி தவெக அலுவலகத்தில் பாமகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டி செஞ்சி தொகுதி பாமக எம்எல்ஏ கணேஷ்குமார், சிலரை பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இதேபோல் தவெகவினரும் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில் அப்பள்ளிக்கு சென்ற தவெக மாவட்ட செயலாளர் குணசரவணன் தலைமை ஆசிரியரிடம் சென்று நாங்கள்தான் ஆளும் கட்சி நாங்கள் சொல்பவரை தான் நீங்கள் நியமன செய்ய வேண்டும் என்று கூறினாராம். இது எம்எல்ஏவின் ஆதரவாளர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட பாமகவினர் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள தவெக மாவட்ட செயலாளர் அலுவலகம் முன் திரண்டனர்.
அவர்கள் இவ்விவகாரம் குறித்து தவெக மாவட்ட செயலாளரிடம் கேட்டுள்ளனர். அப்போது பாமகவினர் இத்தொகுதிக்கு நாங்கள்தான் சட்டமன்ற உறுப்பினர் நாங்கள் தான் பரிந்துரை செய்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு பாமகவினர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிலர் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
