தேனி, ஜூன் 9: தேனியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக, தவெக அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த திருமலை கொழுந்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாய கருவிகளுக்கான பட்டியலில் டிராக்டர்களையும் இணைக்க வேண்டும், வேளாண் டிராக்டர் டீசலுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும், டிராக்டர் டீசலுக்கான வாட் வரி, சாலை வரி, தேசிய பேரிடர் வரி உள்ளிட்ட வரிகளை நீக்க பாஜக தலைமையிலான ஓன்றிய, தவெக தலைமையிலான மாநில அரசு ஆகிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழக முதல்வர் விஜயின் தேர்தல் வாக்குறுதியான பயிர்க்கடன் தள்ளுபடியை முழுமையாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றக் கோரி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
