விருத்தாசலம், ஜூன் 9: மது போதையில் குற்றவாளியுடன் சேர்ந்து சிறுவனிடம் போலீஸ்காரர் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரஞ்சித் என்பவர், விழுப்புரம் கோட்டக்குப்பம் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக கடந்த 6ம் தேதி இரவு அறிக்கை செய்ய நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பணிக்கு செல்லாமல் ஆப்சென்டாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காவலர் ரஞ்சித் மற்றும் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சுபாஷ் (எ) சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 2 பேரும் மதுகுடித்துவிட்டு பைக்கில் சென்றுள்ளனர்.
அண்ணா நகர் வாட்டர் டேங்க் அருகே வந்தபோது, விருத்தாசலம் துர்க்கை நகரை சேர்ந்த வேல்முருகன் மகன் தினேஷ் குமார்(19) மற்றும் இவரது நண்பர்களான 18 வயதான 2 சிறுவர்கள் வந்த பைக்கை வழிமறித்து, கஞ்சா பயன்படுத்துகிறீர்களா என கேட்டு போலீஸ் விசாரணை செய்வதுபோல ரஞ்சித் விசாரித்துள்ளார். அப்போது தினேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து செல்ல முயன்றபோது, அவர்களை ரஞ்சித்தும், சுபாஷூம் சேர்ந்து அசிங்கமாக திட்டி தாக்கியதுடன், 18 வயது சிறுவன் ஒருவன் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்த தினேஷ்குமார், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில், குற்றச் செயலில் ஈடுபட்ட காவலர் ரஞ்சித் மற்றும் விருத்தாசலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி சுபாஷ் (எ) சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து இருவர் மீதும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
