மதுரை, ஜூன் 9: மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ரூ.213 கோடியில் தமிழக நெடுஞ்சாலை துறையால் மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன. இதில், பிரதான மேம்பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலையை இணைக்கும் பால பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பால பணிகளுக்காக அமெரிக்கன் கல்லூரி, தமுக்கம் உள்ளிட்ட கோரிப்பாளையம் பிரதான சாலையில் இருந்த பஸ் நிறுத்தங்கள் அகற்றப்பட்டன. முதற்கட்ட பால பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், அகற்றப்பட்ட பஸ் நிறுத்தங்களை மறுகட்டுமானம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இதன்படி, தமுக்கம் பஸ் நிறுத்தம் கட்டுமான பணிகள் நடக்கும் நிலையில், அமெரிக்கன் கல்லூரி பஸ் நிறுத்தம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படாமல் கிடக்கின்றன. தற்போது அதிகரித்துள்ள வெயில் காரணமாக அங்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள் வெயிலில் வாடியபடி நிற்கின்றனர். இது, வயதானோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கவனித்து பால பணிகளுக்காக அகற்றப்பட்ட பஸ் நிறுத்தங்களை மீண்டும் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
