பூந்தமல்லி: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரிக்கிறது. திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் மண்டலம் 147வது வார்டு கங்கா நகர் பகுதியில் தவெக சார்பில் அப்பகுதி நிர்வாகி குணசேகரன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பதற்கான ஏற்பாடுகள் இரண்டு நாட்களுக்கு முன் இரவு நடந்தது. அங்கு திமுக 147வது வார்டு வட்டச் செயலாளர் மாதவன் வீடு அருகாமையில் உள்ளதால் திமுக மற்றும் தவெகவினரிடையே தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது இருதரப்பினரிடைய வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாகி மோதலாக மாறியது.
இரு தரப்பினரும் மாற்றி மாற்றி கைகளால் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரிடமும் விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளனர். இதற்கிடையே அந்த இடத்தில் மட்டும் தண்ணீர் பந்தல் திறக்காமல் மற்ற இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
