டாஸ்மாக் வருமானத்தை கள் விற்று ஈட்டலாமே?: ஐகோர்ட் கிளை கேள்வி

 

 

மதுரை: டாஸ்மாக் வருமானத்தை கள் விற்பனை மூலம் ஈட்டலாமே? ஏன் கள் விற்பனையை அனுமதிக்கக் கூடாது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்பூத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பதநீர் இறக்கும் வேலை செய்யும் தனது மகன் மணிகண்டனை ஆலங்குளம் எஸ்ஐ இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்ஐ இசக்கி ராஜா, தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, ‘‘கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது? டாஸ்மாக்கை நடத்த கள் தடுப்புச் சட்டத்தை மட்டும் தமிழ்நாடு அரசு கடுமையாக பின்பற்றுகிறது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் தமிழக அரசு செயல்திட்டத்தை வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதி வழங்கினால், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயை கள் விற்பனை மூலம் ஈட்டலாமே’’ என்றார். மேலும், கள்ளின் மருத்துவ பயன் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கில், விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறிய நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

 

Related Stories: