திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
மதுவிலக்கு துறையில் உள்ள குறைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பது மற்றும் எம்ஆர்பியை கடந்து தனிநபர்களுக்குச் செல்லும் தொகை போன்றவற்றுக்கு, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்குள் உரிய தீர்வு காணப்படும். அரசு மருத்துவமனைகள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவு. இதன்படி ஏற்கனவே 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
எஃப்எல் 2 பார்களில் விதிகளை மீறி உறுப்பினர் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவது மற்றும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை போன்றவை குறித்து உரிய ஆய்வு நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளால் ஓராண்டில் அரசுக்கு ரூ.8,000 கோடி முதல் ரூ.11,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இதனை சரிக்கட்ட பிற துறைகள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளும் மூடப்படும். மதுபானக் கடைகளை தனியாருக்கு டெண்டர் விடுவது குறித்து, இதுவரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக வெளிவரும் செய்திகளை கவனித்து வருகிறோம். தனியார் வசம் மதுக்கடைகளை ஒப்படைத்தால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து மட்டுமே தற்போது கவனிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதுபற்றி இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
