பொறுப்பு என்பது வெறும் கடமைகளைச் செய்வதா?

என்றென்றும் அன்புடன் 18

பொறுப்பு என்பது நம் செயல்களுக்கும், அதன் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பேற்பது, மற்றவர்கள் மீதும் சமூகத்தின் மீதும் நாம் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடு.
பொறுப்பு நம்மிடம் இருந்து ஆரம்பிக்கிறது. நம்மை நாமே புரிந்து கொள்ளுதல்.அந்தப் புரிதலே நாம் பிறருக்கு செய்யும் பெரும் உதவி. அந்தப் புரிதலே பிறரை புரிந்து கொள்ளவும் சீரான முடிவுகளை எடுக்கவும் உதவும்.பொதுவாக பொறுப்பு என்கிற வார்த்தையை பிறருக்காக, அல்லது ஒரு செயலுக்காக. நம் முன்னெடுப்பை. சார்ந்து இருப்பது போல் தோன்றும்.
உண்மையை தனக்குள்ளேயே கண்டறியும் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்களை எந்தத் தீர்ப்பும் இல்லாமல், நியாயப்படுத்தாமல் கவனிப்பது, நம் பொறுப்பை உணர்வதற்கான முதல் படி.
ராமாயணத்தில் ராமன் ராஜ்யத்தின் பொறுப்பை ஏற்பதற்கு முன் பல பொறுப்புகளை ஏற்றான். தந்தை தசரதரின் சொல்லைக் காப்பாற்ற, எந்தக் கேள்வியும் கேட்காமல் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டது, தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்றும் மகனின் உச்சபட்ச பொறுப்புணர்வைக் காட்டுகிறது.

ராமனுக்கு பெரும் புரிதல் இருந்தது. .அதுவே, அந்த நிலைமையை எந்தச். சலனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வைத்தது. .அவருடைய புரிதல் அவர் குடும்பத்திடமும், மக்களிடமும் விரிந்தது.
அயோத்தியின் இளவரசனாக, பின்னர் காட்டில் இருந்தபோதும், ரிஷிகளையும் மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அவர் உணர்ந்தார்.பரதனின் தவிப்பை புரிந்து கொண்டார், எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னைச்.

சுற்றி இருப்பவர்களின் மீது கவனமாகவும் பொறுப்பானவராகவும் இருந்தார்.சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது, அவளை. மீட்க அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள், தன் மனைவியின் பாதுகாப்பிற்காக, வானரத்திற்கு உதவி செய்து அவர்களை கொண்டே பாலம் அமைத்து அவர்களுக்குள் வரக்கூடிய பூசல்களை தீர்த்து. வீபீஷணனை ஏற்றுக் கொள்வதில் இருந்த தயக்கத்தைப் போக்கி. ராவணனை எதிர்க்கக் கிளம்பினார். எந்த ஒரு இடத்திலும் தன் பொறுப்பை லக்ஷ்மணனுக்கோ, சுக்ரீவனிடமோ அல்லது அனுமானிடமோ கொடுக்கவில்லை.

ராவணனுக்கு உயிரின் மேல் ஆசை ராஜ்யத்தின் மீது ஆசை. ஆனால், ஆசையுடன் வந்த பொறுப்பை ஏற்க தயாராக. இல்லை. வெறும் ஆசை படு குழியில் தள்ளும். ஆசை யுடன் சேர்ந்த பொறுப்பு பல லட்சியங்களை அடையச் செய்யும்.ராவணனின் பொறுப்புத் துறப்பு, குடும்பத்தையும் நாட்டையும் நிர்மூலமாக்கியது.மகாபாரதம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போராட்டத்தை விவரிக்கிறது.இங்கு பொறுப்பின் மீறல்கள் பெரும் அழிவுக்கு வழிவகுத்தன.பாண்டவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரன் தர்மத்தின் வடிவமாகத் திகழ்ந்தான். சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த போதும், தர்மத்தின் பாதையில் இருந்து விலகாமல், தன் சகோதரர்களையும் நாட்டையும் காக்கும் பொறுப்பை உணர்ந்தான்.

பீஷ்மர் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பிரம்மச்சரிய விரதம் பூண்டார். அதோடு நிற்காமல் குரு வம்சத்தைபொறுப்பேற்றார். தன் கடைசி மூச்சு வரை பொறுப்பேற்றார்.
குருக்ஷேத்திரப் போர்க் களத்தில் உறவினர்களை கொல்லத் தயங்கிய அர்ஜுனனுக்கு, கிருஷ்ணர் ‘‘சுயதர்மம்” (ஒருவனின் கடமை/பொறுப்பு) பற்றி உபதேசித்தார்.
ஒரு க்ஷத்திரியனாக அர்ஜுனன் தன் தர்மத்தைக் காக்கப் போரிட வேண்டிய பொறுப்பை கிருஷ்ணர் விளக்கினார்.

‘‘நீயே உலகம்” (You are the world) என்று அர்ஜுனனின் உள்நிலை, எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் எப்படி இந்த உலகத்தைப் பாதிக்கின்றன என்பதை உணர்த்தினார்.நம்முடைய மனநிலைக்கு நாமே முழுப் பொறுப்பு.மனநிலையில் மாற்றமோ, அதனால் செயலின் மாற்றம் நம் சுற்றத்தை பாதிக்கும்.பொறுப்பாக செயல் படுபவர்கள் அவர்களை சரிப்படுத்திக் கொள்வதில் இருந்து அவர்களுடைய பொறுப்பு ஆரம்பம் ஆகிறது.துரியோதனன் ராஜ்யத்தை ஆள ஆசைப்பட்டாலும் அவன் பெற்றோர்களை பற்றியோ சகோதரர்களின் நலனைப் பற்றியோ,
மக்களை பற்றியோ சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. தன் மாமன் சகுனியால் ஏமாற்றபடுகிறோம் என்கிற சுயபுரிதல் இல்லாததால், தோற்றுப் போனான்.

பாகவதத்தில் கிருஷ்ணர் குழந்தையாக இருந்த போதிலும் , கோகுலத்திற்கும் அதன் மக்களிடத்திலும் பெரும்பொறுப்புடன் செயல்பட்டார்.இந்திரன் அடை மழையாகப் பொழிந்து அழிக்க முற்படும்பொழுது கோவர்த்தனத்தை குடையாகப் பிடித்தார்.பிரம்மா கிருஷ்ணரின் நண்பர்களை மறைத்து வைக்கும் பொழுதும், கொடிய விஷமுள்ள பாம்பு யமுனையில் வாசம் செய்து அந்த நீரை விஷமாக்கும் பொழுதும் பொறுப்பேற்று சற்றும் யோசிக்காமல் அதனுள் பாய்ந்து அதை அடக்கினார்.

கம்சனை வதம் செய்த பின், ஜராசந்தன் கோபமுற்று கிருஷ்ணனை தாக்க பல தடவை போர் தொடுத்த பொழுது, மக்களின் நலனிற்காக துவாரகையை நிர்மாணம் செய்து அனைவரையும் பாதுகாத்து, தனியாக ஜராசந்தனையும் , காலயவனனையும் எதிர் கொண்டார்.பொறுப்பான செயல் என்பது கடமையுணர்வால் அல்லது பயத்தால் வருவதல்ல. அது ஆழ்ந்த புரிதலிலிருந்து இயல்பாக எழ வேண்டும். நம்முடைய மனத் தடைகளையும், நிபந்தனைகளையும் புரிந்துகொண்டு, அவற்றிலிருந்து விடுபடுவதில் இருந்து வருகிறது. இது ஒரு பெரும் பொறுப்பு.பொறுப்பு. என்பது வெறும் சுமையல்ல, அது நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் ஒரு சக்தி.ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கும், அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்று, நடந்தால் வாழ்வு சிறக்கும்.

ரம்யா வாசுதேவன்

Related Stories: