டெல்லி விமான நிலையத்தில் நேற்று சுழன்றடித்த புயலால்,ஏர் இந்தியாவின் 3 விமானங்கள் சேதம்!!

டெல்லி: டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக தரை உபகரணங்கள் இடம்பெயர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீது மோதியதில் மூன்று ஏர் இந்தியா விமானங்கள் சேதம் அடைந்துள்ளன. டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2-ல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவின் மூன்று குறுகிய உடல் விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையின் போது தரை ஆதரவு உபகரணங்கள் மோதியதில் சேதமடைந்ததாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சேதமடைந்த மூன்று விமானங்களும் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா இன்ஜினியரிங் மற்றும் இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான உபகரணங்கள், திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இடம்பெயர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதியதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. வானிலை மாற்றம் குறித்து வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் விமான நிலைய நிர்வாகத்திற்கோ அல்லது விமான நிறுவனங்களுக்கோ எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும் அந்தத் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: