×

உணவுப் பொருட்களை செய்தித்தாளில் பார்சல் செய்ய வேண்டாம்: FSSAI எச்சரிக்கை

டெல்லி: இந்தியா முழுவதும் உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு செய்தித்தாளை பயன்படுத்த வேண்டாம் என உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் அதனை உணவு கடை உரிமையாளர்கள் மற்றும் டீ கடை வைத்துள்ளவர்கள் அதனை முறையாக பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ள எச்சரிக்கையில், செய்தித்தாளில் பயன்படுத்தப்படும் அச்சு மையில் பல்வேறு தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள், நிறமிகள், ரசாயனங்கள் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. பொறித்த உணவுகளை செய்தித்தாள்களில் வைத்து பரிமாறுவது அல்லது சுற்றுவதென்பது வெளியிலிருந்து பார்க்க பாதிப்பு இல்லாதது போல் தோன்றலாம். ஆனால் அவை கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

இதனையடுத்து செய்தித்தாள்கள் அச்சிடும்போதும், கொண்டு செல்லப்படும்போதும், விநியோகிக்கப்படும்போதும் பெரும்பாலும் தூசி, அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற கையாளுதலுக்கு உள்ளாகின்றன. இதனால், அவை உணவை அசுத்தப்படுத்தி, உணவுவழி நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய, நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளைக் கடத்தும் சாத்தியமுள்ள ஊடகங்களாக மாறுகின்றன.

இந்த நிலையில், செய்தித்தாள் மையில் உள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்றால், செரிமானப் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம்கூட உள்ளதென மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இனி பஜ்ஜி, வடை, போண்டா போன்ற உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் பார்சல் செய்ய வேண்டாம் என உணவு வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவற்றுக்கு பதிலாக வாழை இலை, பட்டர் பேப்பர், எவர்சில்வர் மற்றும் கண்ணாடி பாத்திரங்களில் உணவை வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : FSSAI ,Delhi ,Food Safety and Quality Commission ,India ,
× RELATED இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்; திமுக,...