சென்னை: குரூப் 2ஏ பணிக்கான 6ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வருகிற 10ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-2 (குரூப் 2ஏ பணிகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்விற்கான ஆறாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 10ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை, தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு, அதற்கான விவரம் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ள தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.
