பெரம்பலூர், ஜூன் 8: வேப்பந்தட்டை, பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று (8ம் தேதி) முதல் மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு தொடங்குகிறது. கல்லூரி முதல்வர்கள் வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராமராஜ், பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கீதப்பிரியா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலையில் 7 பட்ட வகுப்புகளும், இளம் அறிவியல் பட்ட வகுப்புகளாக 7 பட்ட வகுப்புகளும் என மொத்தம் 14 இளநிலை பட்ட வகுப்புகள் உள்ளன. இவற்றில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மற்றும் பயணி மேலாண்மை, பிகாம், பிபிஏ, பி.எஸ்.டபுள்யூ ஆகிய 7- பட்ட வகுப்புகளுக்கு தலா 60 மாணவ, மாணவியர் என 420 பேர்களுக்கும், கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், உயிர் தொழில்நுட்பவியல் ஆகிய 7 பட்ட வகுப்புகளுக்கு தலா 40 மாணவ, மாணவியர் என 280 பேர்களுக்கும் என மொத்தம் 700 மாணவ, மாணவியருக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
வேப்பந்தட்டை அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைப் பட்ட வகுப்புகளாக பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பி.காம், பிபிஏ, இளம் அறிவியல் பட்ட வகுப்புகளாக பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி தாவரவியல், பிஎஸ்சி விலங்கியல், பிஎஸ்சி உயிர் தொழில் நுட்பவியல் ஆகிய இளநிலை பட்ட வகுப்புகள் உள்ளன. இவற்றில் தமிழ், ஆங்கிலம், பிகாம், பிபிஏ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 5- பட்ட வகுப்புகளுக்கு தலா 60 மாணவ, மாணவியர் என 300 பேர்களுக்கும், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிர் தொழில் நுட்பவியல் ஆகிய 5 பட்ட வகுப்புகளுக்கு தலா 40 மாணவ, மாணவியர் என 200 பேர்களுக்கும் என மொத்தம் 500 மாணவ, மாணவியருக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. www.tngasa.in < //www.tngasa.in/ > என்ற முகவரியில் ஆன்லைன் முறையில் மே7ம்தேதி தொடங்கிய அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை 29ம் தேதி வரை நடத்தப்பட்டு பின்னர் மாணவர் நலன் கருதி விண்ணப்பம் பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்காக மீண்டும் ஜூன் 1,2 ஆகிய 2-நாட்கள் விண்ணப்பங்கள் பதிவு நடைபெற்றன.
இதில் 700 இடங்களைக் கொண்ட பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்திட 15,975 பேர்களும், 500 இடங்களைக் கொண்ட வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்திட 5027 பேர்களும் இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து ஜூன் 5, 6 தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள் என சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று 8ம்தேதி முதல் வரும் 18ம்தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தக்கலந்தாய்விற்கு வரும் போது, அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள்-3, பாஸ்போர்ட் வடிவ புகைப்படம்-4, ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்க நகல் கொண்டுவர வேண்டும். இணைய வழியாக ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்கள் பெற்ற மதிப்பெண் தரவரிசையின் படி, சேர்க்கை உறுதி செய்யப்படும் வேப்பந்தட்டை, பெரம்பலூர் அரசு கல்லூரி முதல்வர்கள் ராமராஜ், கீதப்பிரியா தெரிவித்துள்ளார்.
