மதுரை, ஜூன் 8: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மொத்தம், சில்லறை வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மார்க்கெட்டில் அனைத்து பகுதிகளிலும் சுற்றித்திரியும் மாடுகளால், அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரிக்ைக வலுத்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் எங்களை போன்றவர்களில் பலர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகிறோம். வாகனத்தை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்கி கொண்டு வந்தால், மாடுகளின் சண்டையில் வாகனம் கீழே விழுந்து சேதமாகி கிடக்கிறது. மேலும் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கும் போதும், வாகனத்தில் செல்லும் போது திடீரென குறுக்கே வருவதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதுபோல் மார்க்கெட்டில் மாடுகள் உலா வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: மதுரை மார்க்கெட்டை சுற்றி உள்ள கரும்பாலை, மானகிரி, வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பலர் மாடுகளை வளர்க்கின்றனர். இவர்களில் பலரும் அவற்றை மார்க்கெட்டில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இவை இங்கு சேரும் காய்கறி கழிவுகளை உணவாக எடுத்து கொள்கின்றன. இதனால் பணம் கொடுத்து தாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு தவிடு, புண்ணாக்கு,வைக்கோல் போன்றவற்றை கொள்முதல் செய்வதில் இருந்து, அவற்றின் உரிமையாளர்கள் தப்பித்து கொள்கின்றனர்.
இந்த மாடுகள் எங்களை போன்ற வியாபாரிகள் வாங்கி பையில் கட்டி வைத்திருக்கும் காய்கறிகளை கீழே தள்ளி சேதப்படுத்துகின்றன. பல நேரங்களில் சாக்குகளில் இருந்தும் காய்கறிகளை சாப்பிடுகின்றன. அவை கூட்டமாக சுற்றி வருவதால் வியாபாரிகள், பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. சந்தையை சுற்றி உள்ள சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் திணறுவதுடன், விபத்துகளிலும் சிக்கி கொள்கின்றனர்.
மாநகராட்சி தரப்பில் பொது இடங்களில் சுற்றும் மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இதனை விரிவாக மேற்கொள்ளாமல் அவ்வபோது கணக்கு காட்டுவதற்காக மட்டும் செய்வதால், மாடுகளின் தொல்லை தொடர்கிறது. மார்க்கெட்டில் காய்கறி வாங்கி கொண்டிருக்கும் போது திடீரென அவை ஓடி வருவால், பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடைகின்றனர். சில நேரங்களில் அவற்றின் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். எனவே இந்த பிரச்னைக்குமுடிவுகட்ட மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
