×

கடந்த 3 மாதத்தில் ரூ.89 அதிகரிப்பு வீட்டு காஸ் சிலிண்டர் ரூ.1000 ஆக உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி

சேலம்: நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 அதிகரித்துள்ளது. சென்னையில் ரூ.957.50, சேலத்தில் ரூ.975.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெலிவரி ஊழியருக்கு ரூ.50 வரை கொடுக்க வேண்டும் என்பதால், சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன.

இதில் வீட்டு உபயோக சமையல் காஸ், வணிக சிலிண்டர்களின் விலை மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஈரான்- அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், போர் தொடங்கியது முதல் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி, நடப்பு (ஜூன்) மாதத்தின் முதல் தேதியில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.46 வரை அதிகரிக்கப்பட்டது.

சென்னையில் ரூ.3,283, டெல்லியில் ரூ.3,113.50, கொல்கத்தாவில் ரூ.3,255.50, மும்பையில் ரூ.3,067, பெங்களூருவில் ரூ.3,198 ஆக அதிகரித்தது. அதே சமயம், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை பொறுத்தவரை கடந்த மார்ச் 7ம் தேதி ரூ.60 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து கடந்த மே மாதம் விலை உயர்த்தப்படாமல் நிலையாக இருந்தது. இந்நிலையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.29 அதிகரித்தது.

அதன்படி டெல்லியில் 14.2 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.913ல் இருந்து ரூ.942 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ.928.50ல் இருந்து ரூ.957.50ஆகவும், சேலத்தில் 975.50 ஆகவும் உயர்ந்துள்ளது. டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.50 வரை கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டி இருப்பது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 3 மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.89 வரை உயர்ந்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாத நிலையில், கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை இன்னும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* கச்சா எண்ணெய் விலை குறைந்தும் விலையேற்றம்
சர்வதேச சந்தையில் பிராண்ட் கச்சா எண்ணெய் விலை, நேற்று பீப்பாய் 93 டாலராக இருந்தது. இது காலையில் 95 டாலராக இருந்த நிலையில், மதியத்திற்கு பின் 2 டாலர் விலை குறைந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன் பீப்பாய் 108 டாலருக்கு விற்கப்பட்டது. தற்போது அதனுடன் ஒப்பிடும் போது, 15 டாலர் என்ற நிலையில் விலை குறைந்திருக்கிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை குறைக்க தான் வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக, வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு உயர்த்தியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நேரத்தில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை ஏற்றாமல் இருந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே, தற்போது தொடர்ந்து விலையேற்றம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

* முக்கிய நகரங்களில் சிலிண்டர் விலை

வீட்டு சிலிண்டர் வர்த்தக சிலிண்டர்
டெல்லி ரூ.942 ரூ.3,113.50
மும்பை ரூ.941.50 ரூ.3,067.50
கொல்கத்தா ரூ.968 ரூ.3,255.50
சென்னை ரூ.957.50 ரூ.3,283

Tags : Salem ,Chennai ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர்,...