பல்லாவரம், ஜூன் 6: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் மாரி (46). அதே பகுதியில் தோட்ட வேலை செய்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு தனது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம், நைசாக பேச்சுக்கொடுத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
